திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.31 திருக்கடவூர்
பொள்ளத்த காய மாயப்
    பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்
    விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி
    உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே.
1
மண்ணிடைக் குரம்பை தன்னை
    மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன்
    வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி
    ஆடிடும் பத்தர்க் கென்றுங்
கண்ணிடை மணியர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே.
2
பொருத்திய குரம்பை தன்னுட்
    பொய்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீர்
    உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை
    வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே.
3
பெரும்புலர் காலை மூழ்கிப்
    பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்
    கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம்
    விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார்
    கடவூர்வீ ரட்ட னாரே.
4
தலக்கமே செய்து வாழ்ந்து
    தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே
    விளக்கதிற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே
    காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன்
    கடவூர்வீ ரட்ட னாரே.
5
பழியுடை யாக்கை தன்னிற்
    பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன்
    மாயமுந் தெளிய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை
    ஐவரால் அலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன்
    கடவூர்வீ ரட்ட னாரே.
6
மாயத்தை அறிய மாட்டேன்
    மையல்கொள் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன்
    பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தால் நினைய மாட்டேன்
    நீதனே நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன்
    கடவூர்வீ ரட்ட னாரே.
7
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
    பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா
    ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளேன் என்செய் கேன்நான்
    இடும்பையால் ஞான மேதுங்
கற்றிலேன் களைகண் காணேன்
    கடவூர்வீ ரட்ட னாரே.
8
சேலின்நேர் அனைய கண்ணார்
    திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய் யோடு
    பலபல ஆட்டி யென்றும்
மாலினைத் தவிர நின்ற
    மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங்
    கடவூர்வீ ரட்ட னாரே.
9
முந்துரு இருவ ரோடு
    மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவர்
    இருடிகள் இன்பஞ் செய்ய
வந்திரு பதுகள் தோளால்
    எடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார்
    கடவூர்வீ ரட்ட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.108 திருக்கடவூர் - திருவிருத்தம்
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த
    மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள்
    எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
    பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே.
1
பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்
    தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
    உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு
    திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட
    வூருறை உத்தமனே.
2
கரப்புறு சிந்தையர் காண்டற்
    கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்
    கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்
    காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே.
3
மறித்திகழ் கையினன் வானவர்
    கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர்
    கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக்
    காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே.
4
குழைத்திகழ் காதினன் வானவர்
    கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்
    ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக்
    காலனைக் தானலற
உழக்கிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே.
5
பாலனுக் காயன்று பாற்கடல்
    ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண
    மோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு
    தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கட
    வூருறை உத்தமனே.
6
படர்சடைக் கொன்றையும் பன்னக
    மாலை பணிகயிறா
உடைதலைக் கோத்துழல் மேனியன்
    உண்பலிக் கொன்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக்
    காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே.
7
வெண்டலை மாலையுங் கங்கைக்
    கரோடி விரிசடைமேற்
பெண்டனி நாயகன் பேயுகந்
    தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக்
    காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட
    வூருறை உத்தமனே.
8
கேழல தாகிக் கிளறிய
    கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்
    திட்டவம் மாலவற்கன்
றாழியும் ஈந்து அடுதிறற்
    காலனை அன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட
    வூருறை உத்தமனே.
9
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள
    மாலை திருமுடிமேல்
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்
    பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி
    பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட
    வூருறை உத்தமனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com